சென்னையிலிருந்து 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு


சென்னையிலிருந்து 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 4 Sep 2024 11:28 AM GMT (Updated: 4 Sep 2024 2:01 PM GMT)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

தொடர் விடுமுறை, முகூர்த்த நாள், விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதை முன்னிட்டு நாளை முதல் 7-ம் தேதி வரை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 5, 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் 1,030 பேருந்துகளும், செப்டம்பர் 8-ம் தேதியன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்.6, செப்.7-ம் தேதியன்று 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து செப் 6, 7-ம் தேதியன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 23 ஆயிரத்து 514 பயணிகளும், சனிக்கிழமை அன்று 6 ஆயிரத்து 961 பயணிகளும், ஞாயிறு அன்று 21 ஆயிரத்து 650 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story