செந்தில் பாலாஜி வழக்கு: மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை: சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்


செந்தில் பாலாஜி வழக்கு: மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை: சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 5 Aug 2024 9:05 AM GMT (Updated: 5 Aug 2024 10:57 AM GMT)

செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி,சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.கடந்த ஓராண்டாக முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு என்று பல்வேறு நீதிமன்றங்களிலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், வழக்கு விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறைக்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அமலாக்கத்துறை இதுவரை 7 முறை எந்த காரணமும் இல்லாமல் வழக்கை ஒத்திவைக்க கோரியதாக செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர் வாதிட்டார்.

செந்தில் பாலாஜி வழக்கில் இன்றும் வாய்தா கேட்ட அமலாக்கத் துறையிடம், வாதாடுவதற்கு தயாராக இல்லை எனக்கூறி விசாரணையை தள்ளிவைக்க கோருவது என்ன மாதிரியான செயல்..? என நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்ட்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு ஒத்தி வைத்தது.


Next Story