ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 July 2024 5:59 AM GMT (Updated: 11 July 2024 6:59 AM GMT)

ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்-அமைச்சர்' திட்டத்தைத் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை,

முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின், கடந்த சட்டசபை தேர்தலின் போது 'உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்' என்ற பெயரில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். இந்த மனுக்கள் மீது தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதி அளித்தார்.

அதன்படி முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு மக்களிடம் இருந்து வாங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ''முதல்-அமைச்சரின் முகவரி'' என்ற பெயரில் ஒரு தனித்துறையை உருவாக்கினார். பின்னர் இந்த துறையின் மூலம் மக்கள் அளித்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்தார். முதல்-அமைச்சரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின், மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு மனிதனின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கூறுவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை'' என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டு வரும் அதே வேளையில், அரசின் சேவைகளும் அவர்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் விரும்பினார். அதற்காக முதல்-அமைச்சரின் முகவரி துறையின் கீழ் ''மக்களுடன் முதல்-அமைச்சர்" திட்டத்தை கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் 18-ம் தேதி தொடங்கினார்.

முதல் கட்டமாக இந்த திட்டம், நகர்புறங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. அதற்காக நகர்புறங்களில் ஒவ்வொரு வார்டு வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அரசின் 15 துறைகளின் கீழ் உள்ள 44 சேவைகள் பொதுமக்களுக்கு மிக எளிதாக வழங்கப்பட்டன.

அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளும் ஒரே இடத்தில் உடனடியாக கிடைத்ததால் பொதுமக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த முகாம்கள் மூலம் மொத்தம் 8 லட்சத்து 74 ஆயிரம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்த சூழ்நிலையில், ஊரக பகுதிகளிலும் மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்'' செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி தவிர தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் இந்த முகாம் இன்று தொடங்கியது.

இந்த திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். அதற்கான விழா, நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ரூ.445 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

மேலும் ரூ. 56 கோடி மதிப்பில் 2,637 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்க உள்ளார். 20 புதிய பேருந்துகளையும் கொடியசைத்து முதல்-அமைச்சர் துவக்கி வைக்கிறார்.

இதேபோல அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், கலெக்டர்கள் தலைமையில் இந்த முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மு. க. ஸ்டாலின் ஏற்கனவே கேட்டு கொண்டார். ஊரக பகுதிகளில் மொத்தம் 12 ஆயிரத்து 500 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 2,500 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


Next Story