மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை: மத்திய அரசுக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம்


மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி இல்லை: மத்திய அரசுக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 Sep 2024 6:23 PM GMT (Updated: 12 Sep 2024 6:53 AM GMT)

மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசு பாரபட்ச போக்கை கடைபிடிப்பதாக செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி அளிக்கவில்லை என மத்திய அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி வஞ்சிக்கப்பட்டதோ, அதே வகையில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்குவதில் சமநிலைத் தன்மையோடு அணுக வேண்டிய மத்திய அரசு அப்பட்டமான பாரபட்சத்தை கடைபிடித்து மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான மொத்த நிதியில் 80 சதவிகித நிதி மராட்டியம், குஜராத் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் மெட்ரோ ரெயில் சேவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது.

கடந்த 2022-23, 2023-24 நிதியாண்டில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. மொத்த 118.9 கி.மீ. தூரமுள்ள இத்திட்டத்திற்கான மதிப்பீடு ரூபாய் 63,246 கோடி. இதில் பெரும்பாலான நிதிச்சுமையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. ஜூலை 2024 இல் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இந்தியா முழுமைக்கான மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூபாய் 21 ஆயிரத்து 247 கோடியே 94 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 9 சதவிகிதம் அதிகமாகும். இந்த ஒதுக்கீட்டின்படி மராட்டிய மாநிலத்திற்கு மொத்த நிதி ஒதுக்கீட்டில் 36 சதவிகிதமும், குஜராத் மாநிலத்திற்கு 15.5 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நான்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 80 சதவிகிதம் ஒதுக்கியிருப்பது அப்பட்டமான பாரபட்சமாகும். இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படாதது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒரு ரூபாய் கூட சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்கவில்லை என்பது மத்திய பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாரபட்ச செயலாகும்.

சென்னை மாநகரம் மற்றும் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலை தவிர்ப்பதற்கு ஒரே வழிமுறை மெட்ரோ ரெயில் திட்டமாகும். இந்த அடிப்படையில் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூபாய் 14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு முதல் கட்டமாக மெட்ரோ ரெயில் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

அது இன்றைக்கு பயணிகளுக்கு பெருமளவில் உதவி வருகிறது. மேலும் பல திட்டங்களுக்கு மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும் மாநில அரசு மெட்ரோ ரெயில் திட்டங்களை பல வழித்தடங்களில் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.

மத்திய அரசு புறக்கணித்தாலும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தற்போது மெட்ரோ ரெயில் திட்டங்கள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. ஆனால், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிற தமிழ்நாடு அரசு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய மெட்ரோ ரெயில் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்குகிற நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரியதாகும்.

எனவே, தமிழக மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதங்களுக்கு மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இத்தகைய பாரபட்ச போக்கை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பின்பற்றுமேயானால் தமிழக மக்களின் கடும் கொந்தளிப்புக்கும், எதிர்ப்புக்கும் ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.


Next Story