விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி. முடிவு


விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி. முடிவு
x
தினத்தந்தி 22 Sep 2024 11:51 AM GMT (Updated: 22 Sep 2024 12:14 PM GMT)

முதன்மை தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

சென்னை,

அரசு துறைகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. அண்மையில் டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார்.

இந்த நிலையில், முதன்மை தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய மாற்றம் கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மற்றும் குரூப்-2 ஆகிய தேர்வுகள் முதல்நிலை(Prelims) மற்றும் முதன்மை(Mains) ஆகிய 2 நிலைகளில் நடத்தப்படுகின்றன.

இதில் முதல்நிலை தேர்வுகள் விடைகளை தேர்வு செய்யும் வகையில் ஓ.எம்.ஆர்.(OMR) தாள்களிலும், முதன்மை தேர்வுகள் விரிவாக விடையளிக்கக் கூடிய வகையில் எழுத்து தேர்வுகளாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முதன்மை தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், விடைத்தாள்கள் சரியாக மதிப்பீடு செய்யப்படுவதில்லை எனவும் தேர்வர்கள் புகார் தெரிவிக்கும் சூழல் நிலவி வருகிறது.

இதை முற்றிலுமாக தவிர்த்து, வெளிப்படைத்தன்மையோடு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் புதிய முறையை அறிமுகம் செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு புதிய மென்பொருள் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட இருக்கின்றன.

இந்த புதிய நடைமுறையில், தேர்வர்களின் விடைத்தாள்களில் ஸ்கேன் செய்யப்பட்டு பாட வாரியாக அவர்கள் அளித்துள்ள பதில்கள் தனித்தனியே பிரித்தெடுக்கப்படும். பின்னர் மென்பொருள் உதவியுடன் விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்களுக்கு தேர்வர்களின் விடைத்தாள் பகிரப்படும். அவர்கள் அந்த விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி.யின் விடைத்தாள்களுடன் ஒப்பிட்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள்.

இதில் முக்கிய அம்சமாக விடையை படித்து மதிப்பெண் வழங்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதற்கு முன்பாக அடுத்த விடையை திருத்துவதற்கு மென்பொருள் அனுமதிக்காது. இறுதியாக பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வர்களுக்கான இறுதி மதிப்பெண் வழங்கப்படும்.

இவை அனைத்தும் ஜி.ஐ.எஸ்.(GIS) எனப்படும் புவி தகவல் அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இந்த புதிய நடைமுறையை வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குரூப்-2 முதன்மை தேர்வில் அமல்படுத்த டி.என்.பி.எஸ்.சி. திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Next Story