ஆஸ்திரேலியாவில் இன்னவேஷன் மையத்தினை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்


ஆஸ்திரேலியாவில் இன்னவேஷன் மையத்தினை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 26 July 2024 12:24 PM GMT (Updated: 26 July 2024 12:27 PM GMT)

ஆஸ்திரேலியாவில் இன்னவேஷன் மையத்தினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, ஆஸ்திரேலியா நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (வெள்ளிக்கிழமை) சிட்னி மாகாணத்தில் உள்ள வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் உள்ள இன்னவேஷன் மையத்தை பார்வையிட்டு அதன் அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின்போது குறைந்து வரும் வேளாண்மை தொழிலாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தமிழக வேளாண்மையை ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் நவீனப்படுத்துதல் குறித்தும் குறைந்த செலவில் பசுமைக்குடில்களை அமைக்க ஆஸ்திரேலியாவின் உயரிய தொழில்நுட்பங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசித்தார்.

மேலும், தமிழகத்தில் நீர் ஆதாரங்களை உழவர்களின் பங்களிப்புடன் மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை ஆஸ்திரேலியா இந்தியா நீர் ஆராய்ச்சி மையத்தின் மூலமாக முன்னெடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேற்கண்ட கலந்துரையாடலின் போது தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் அரசு அபூர்வா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் வெ.கீதா லட்சுமி மற்றும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழக அதிகாரிகள் முனைவர் டான் ரைட் முனைவர் இயன் ஆண்டர்சன் மற்றும் நிஷா ராகேஷ் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story