கிடுகிடுவென அதிகரித்த நீர்வரத்து... முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை


கிடுகிடுவென அதிகரித்த நீர்வரத்து... முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
x
தினத்தந்தி 12 Aug 2024 2:28 AM GMT (Updated: 12 Aug 2024 5:40 AM GMT)

நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

மேட்டூர்,

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த மாதம் 30-ந் தேதி மாலை மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியதுடன் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் கடந்த 7-ந் தேதி முதல் அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து டெல்டா பாசன தேவைக்காக அணையை ஒட்டியுள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரத்து 505 கன அடியாக அதிகரித்தது. இதற்கிடையே டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இரவில் வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடியாக தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் தொடர் நீர்வரத்து காரணமாக மீண்டும் மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.

இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.


Next Story