விஷ சாராய விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை


விஷ சாராய விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 20 Jun 2024 1:27 AM GMT (Updated: 20 Jun 2024 5:08 AM GMT)

கள்ளக்குறிச்சி விஷ சாராயத்துக்கு பலி எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தனர்.

நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஷ சாராயத்துக்கு பலி எண்ணிக்கை தற்போது 35ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கருணாபுரத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், விஷ சாராய விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் முடிவடைந்த நிலையில், தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி, மதுவிலக்கு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Next Story