காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு


காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு
x
தினத்தந்தி 21 July 2024 4:58 AM GMT (Updated: 21 July 2024 5:44 AM GMT)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

சேலம்,

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படுவதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் நேரமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்ந்துள்ளது. ஒரே வாரத்தில் 26.15 அடி உயர்ந்துள்ளது. நேற்று நீர் வரத்து வினாடிக்கு 68,843 கன அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் அதிகரித்து 71,777 கன அடியாக உள்ளது. தற்போது அணையின் தற்போதைய நீர்மட்டம் 68.91 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story