தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 25 Sep 2024 7:07 AM GMT (Updated: 25 Sep 2024 7:22 AM GMT)

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகள் மற்றும் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வருகிற 27-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 2-ந்தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க, காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடித்து 07.10.2024 (திங்கட்கிழமை)அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story