ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2024 7:23 AM GMT (Updated: 12 Sep 2024 7:42 AM GMT)

ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது, நாட்டு மக்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகள், பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான ஆவணமாக திகழ்கிறது.

பல்வேறு நலத்திட்ட உதவிகள் சேவைகளை பெறுவதற்கு தனிமனித அடையாளமாக திகழ்வது ஆதார் அட்டை. கண்கருவிழி, கைரேகை, பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் அதில் அடங்கி உள்ளதால் போலிகளை தவிர்த்து தகுதி வாய்ந்த நபர்கள் பயனடைய முடிகிறது.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. 10 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள், கைரேகையை புதிதாக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில், ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க மேலும் 3 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 15-ந் தேதியுடன் கால அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், டிசம்பர் 14 வரை கால அவகாசம் நீட்டித்து ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story