மாலையில் ஒருவருடன் நிச்சயதார்த்தம்... இரவில் காதலனை வீட்டுக்கு அழைத்த கல்லூரி மாணவி: அடுத்து நடந்த சம்பவம்


மாலையில் ஒருவருடன் நிச்சயதார்த்தம்... இரவில் காதலனை வீட்டுக்கு அழைத்த கல்லூரி மாணவி: அடுத்து நடந்த சம்பவம்
x
தினத்தந்தி 19 Jun 2024 9:43 PM GMT (Updated: 20 Jun 2024 12:48 PM GMT)

கல்லூரி மாணவி திடீரென தனது காதலனுடன் செல்போனில் பேசி அவரை இரவில் தனது வீட்டிற்கு வரவழைத்தார்.

மாலையில் ஒருவருடன் நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்ட கல்லூரி மாணவி, இரவில் காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் சென்று திருமணத்தையும் முடித்துக்கொண்டார்.

சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

காதலனை திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி, சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர், உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். மாணவியின் காதலை அவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து மாணவிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தார்கள். மாப்பிள்ளையும் முடிவானது. இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் நேற்று முன்தினம் மாலை கே.கே.நகரில் உள்ள மாணவியின் வீட்டில் நிச்சயதார்த்த விழா நடந்தது. அப்போது, அந்த மாணவி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு தனக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் மாலையும் மாற்றிக்கொண்டார். புகைப்படமும் எடுத்துக்கொண்டார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உற்றார், உறவினர்கள் கலந்துகொண்டனர். இரவு விருந்து நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நேரத்தில் தான் அந்த பூகம்பம் வெடித்தது.

நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட அந்த கல்லூரி மாணவி திடீரென தனது காதலனுடன் செல்போனில் பேசி அவரை இரவில் தனது வீட்டிற்கு வரவழைத்தார். காதலனும் தனது நண்பர்கள் 5 பேரோடு மாணவியின் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து காதலனுடன் வீட்டை விட்டு கல்லூரி மாணவி வெளியேறினார். அதனை தடுத்த உறவினர்களை காதலனுடன் வந்த நண்பர்கள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். இதில், மாணவியின் உறவினர் ஒருவரும் தாக்கப்பட்டார். இந்த களேபரத்தில் தனது காதலனோடு வீட்டை விட்டு மாணவி வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரணியன் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், நேற்று மாலை தனது காதலனை திருமணம் செய்துகொண்டதாகவும், தனக்கு 21 வயதாகிறது என்பதால் சட்டப்படி நான் செய்துகொண்ட திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட மாணவி தனது காதல் கணவனோடு கே.கே.நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடமும் சமாதானம் பேசப்பட்டது. குடும்பத்தாரும் மாணவியின் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். பின்னர், அனைவரும் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

காதலனை திருமணம் செய்ய நினைத்த பெண் நிச்சயதார்த்தத்திற்கு முன்னதே இந்த செயலை செய்திருந்தால் மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பம் ஏமாற்றப்படாமல் இருந்திருக்கும். பெண்ணின் குடும்பத்தை நம்பி நிச்சயம் செய்ய வந்த ஒரு ஆணும், அவன் குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்காது.


Next Story