கடனை வசூலிக்க நிதி நிறுவனம் நெருக்கடி: விஷம் குடித்து ஊழியர் தற்கொலை


கடனை வசூலிக்க நிதி நிறுவனம் நெருக்கடி: விஷம் குடித்து ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Jun 2024 5:02 AM GMT (Updated: 7 Jun 2024 5:12 AM GMT)

கடனை வசூலிக்க வேண்டும் என்று நிதி நிறுவனத்தின் மேலாளர் அருண்குமாரிடம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள வீடூர் புது காலனியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவர், மதுலிகா (19) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அருண்குமார் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் பணி அருண்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 1-ந்தேதி அருண்குமாரிடம், கடன் வாங்கியவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து கட்ட வேண்டும் என்று நிதி நிறுவனத்தின் மேலாளர் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் மன உளைச்சலில் இருந்த அருண்குமாா், அன்று மாலையிலேயே பேரணி என்ற இடத்தில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அருண்குமாா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

இதுகுறித்து மதுலிகா, விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது கணவர் சாவுக்கு காரணமான நிதி நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story