போதை பொருள் கடத்திய தி.மு.க. நிர்வாகி: என்ன சொல்ல போகிறது தி.மு.க..? அன்புமணி ராமதாஸ் கேள்வி


போதை பொருள் கடத்திய தி.மு.க. நிர்வாகி: என்ன சொல்ல போகிறது தி.மு.க..?  அன்புமணி ராமதாஸ் கேள்வி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 30 July 2024 11:00 AM GMT (Updated: 30 July 2024 12:29 PM GMT)

முதல்-அமைச்சர் இனியாவது விழித்துக் கொண்டு போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ. 70 கோடி மதிப்புள்ள மொத்தம் 6.93 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணைத் தலைவர் செய்யது இப்ராகிம் என்பவர் உள்ளிட்ட மூவரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய செய்யது இப்ராகிம் தி.மு.க.வைச் சேர்ந்தவர் தான் என்பதை அக்கட்சியின் தலைமையும் ஒப்புக் கொண்டு, அவரை தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கியிருக்கிறது. போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது தி.மு.க. நிர்வாகி செய்யது இப்ராகிம். இதற்கு முன் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட போது, அவரது பின்னணியை ஆய்வு செய்தா கட்சியில் சேர்க்க முடியும்? என்று தி.மு.க. வினா எழுப்பியது. இப்போது செய்யது இப்ராகிம் என்ற இன்னொரு தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து தி.மு.க. என்ன சொல்லப் போகிறது? ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பிறகும் தி.மு.க. நிர்வாகிகளின் சட்டவிரோத செயல்களை திமுக தலைமையும், ஆட்சித் தலைமையும் அனுமதித்திருக்கிறது என்பது தான் இதன் பொருள்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை பரப்பி அனைத்து வகை சீரழிவையும் ஏற்படுத்தியவர்களுக்கு தி.மு.க. அடைக்கலம் கொடுத்திருக்கிறது. போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட நிர்வாகி கைது செய்யப்பட்ட பிறகு அவரை நீக்குவதன் மூலமாக மட்டும் இதிலிருந்து தி.மு.க. தப்பித்துக் கொள்ள முடியாது. போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. விளக்கம் அளிக்க வேண்டும்.

ராஜாஜி, ஓமந்துரார், காமராசர், அண்ணா ஆகியோர் கடைபிடித்த கொள்கைகளால் மது என்றால் என்னவென்றே தெரியாத தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் உருவானது. ஆனால், மதுவிலக்கை தி.மு.க. அரசு ரத்து செய்ததால் 3 தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விட்டன. இப்போது போதைப் பொருள் என்ற பெரும் தீமை தமிழ்நாட்டில் பரவுவதற்கு தி.மு.க.வினரே காரணமாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தும் அதைக் கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தான் குற்றவாளிகளை பிடித்திருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது விழித்துக் கொண்டு போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது தி.மு.க. தான் என்று தமிழ்நாட்டு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவாகும் நிலை உருவாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story