நாமக்கல் அருகே நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி மடக்கி பிடிப்பு: கொள்ளையன் சுட்டுக்கொலை


நாமக்கல் அருகே நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி மடக்கி பிடிப்பு: கொள்ளையன் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 27 Sep 2024 6:48 AM GMT (Updated: 27 Sep 2024 7:42 AM GMT)

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொலை செய்தனர்.

நாமக்கல்,

கேரள மாநிலம் திருச்சூரில் நேற்றைய தினம் ஏ.டி.எம். இயந்திரத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சில நபர்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச் செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. மேலும் அந்த லாரி சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சினிமா பாணியில் போலீஸ் வாகனங்களைக் கொண்டு லாரியை துரத்திச் சென்ற போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஈரோடு செல்லும் சாலையில் உள்ள அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்தனர்.

லாரியில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்ததால், மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார், கண்டெய்னர் லாரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வனப்பகுதிக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அந்த லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் சொகுசு கார் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் லாரியின் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நபரை போலீசார் சுட்டுக்கொலை செய்தனர். மற்ற நபர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story