காவிரி விவகாரம்: நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பு


காவிரி விவகாரம்: நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பு
x
தினத்தந்தி 15 July 2024 12:43 PM GMT (Updated: 15 July 2024 1:16 PM GMT)

நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12 முதல் 31-ந்தேதி வரை 20 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது.

இதற்கிடையில், பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. தற்போதைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்றும், 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுமென்றும் சித்தராமையா தெரிவித்து இருந்தார்.

இதற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாளை நடைபெற இருக்கும் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் யார் கலந்து கொள்வது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story