ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் நீராட தடை


ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் நீராட தடை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 31 July 2024 4:26 PM GMT (Updated: 1 Aug 2024 9:00 AM GMT)

ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்திறை இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள கீழ்கண்ட திருக்கோவில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையினை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் திருக்கோவில், காங்கேயம்பாளையம் அருள்மிகு நட்டாட்ரீஸ்வரர் திருக்கோவில், நஞ்சைகாளமங்கலம் அருள்மிகு மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் அருள்மிகு குலவிளக்கம்மன் திருக்கோயில், அம்மாபேட்டை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோவில், ஊஞ்சலூர் அருள்மிகு மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் மற்றும் காவிரி ஆற்றங்கரையின் அருகே உள்ள சிறிய திருக்கோவில்களுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 03.08.2024 மற்றும் 04.08.2024 ஆகிய தேதிகளில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story