விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. புறக்கணிப்பு


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. புறக்கணிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2024 10:50 AM GMT (Updated: 15 Jun 2024 12:09 PM GMT)

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

சென்னை,

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் பா.ம.க வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தலைமையில் இன்று அக்கட்சி கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாக திறனற்ற அராஜக தி.மு.க. ஆட்சியில் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




Next Story