விஷ சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நடிகர் விஷால் கோரிக்கை


விஷ சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நடிகர் விஷால் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Jun 2024 9:22 AM GMT (Updated: 20 Jun 2024 11:10 AM GMT)

மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷ சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்." என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷ சாராயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களில் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story