4 புதிய மாநகராட்சிகள் உதயம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


4 புதிய மாநகராட்சிகள் உதயம்:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Aug 2024 7:01 AM GMT (Updated: 12 Aug 2024 7:13 AM GMT)

தி.மலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை,

மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தரம் உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் மிகப்பெரிய பேரூராட்சியாக இருப்பதை நகராட்சியாகவும், நகராட்சியை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தார்கள். மாநகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலம் அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும்.

இதன்படி புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று இதன் அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளை இணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் கடந்த 30.3.2023 அன்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பாக உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளை தொடங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு இருந்தார்.

அதன்படி புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியும், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியும், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி, 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.1998-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த 4 புதிய மாநகராட்சிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டதன்மூலம் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி அருகே அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் பெருநகரங்களுக்கு இணையான சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு அடையும். அது மட்டுமின்றி இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலா பயணிகள், வணிக நிறுவனங்கள் தொழில் நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.


Next Story