23-ந்தேதி த.வெ.க. மாநாடு? - இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் விஜய்


23-ந்தேதி த.வெ.க. மாநாடு? - இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் விஜய்
x
தினத்தந்தி 12 Sep 2024 3:12 AM GMT (Updated: 16 Sep 2024 5:06 AM GMT)

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை,

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23-ந்தேதி மாநாட்டை நடத்த விஜய் முடிவுசெய்துள்ளார்.

மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மாநாட்டை நடத்துவது குறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். செப்.23 குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய நேரத்தில் நடத்த முடியுமா என்றும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் விஜய் தீவிரமாக ஆலோசித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற 23-ந்தேதி மாநாடு நடைபெறுமா? அல்லது மாநாடு தேதி தள்ளிவைக்கப்படுமா என த.வெ.க.வினர் மற்றும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story