அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை, இருக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் விரைவில் இயக்கம்


அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை, இருக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் விரைவில் இயக்கம்
x
தினத்தந்தி 11 July 2024 3:08 PM GMT (Updated: 12 July 2024 7:16 AM GMT)

அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பஸ்களை இயக்கி வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் நெடுந்தூர பயணங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெடுந்தூர பயணங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் சொகுசு பஸ்களை இயக்கி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவற்றிற்கு இணையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பஸ்களை இயக்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2022-2023-ம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு அறிவிக்கப்பட்ட 200 புதிய பஸ்கள் தற்போது கர்நாடகா மாநிலத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்படுகின்றன. இந்த 200 பஸ்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பி.எஸ்.-6 ரக பஸ்கள் ஆகும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு முதல் முறையாக பி.எஸ்.-6 ரக பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த பஸ்கள் வெளிர் பச்சை நிறத்தில் வலம் வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 200 பஸ்களில் 150 பஸ்கள் கீழே 30 இருக்கைகள், மேலே 15 படுக்கை வசதி கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன. எஞ்சிய 50 பஸ்கள் முதியோர் மற்றும் பெண்கள் நலன் கருதி கீழே உள்ள ஒற்றை இருக்கை பகுதியும் படுக்கை வசதி கொண்டதாக மாற்றி வடிவமைக்கப்பட்டு கீழே 20 இருக்கைகள் மற்றும் 5 படுக்கை வசதிகளுடன் மேலே 15 படுக்கை வசதியுடனும் வடிவமைக்கப்படுகின்றன (தற்போது ஆம்னி பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் இந்த கட்டமைப்பில் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது).

இதில் முதல் கட்டமாக 25 பஸ்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக தலைமை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பஸ்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, புதிதாக வாங்கப்பட்டுள்ள பஸ்களில் கருவிகள் சரியாக இருக்கின்றனவா? வர்ணங்கள் சரியாக இருக்கிறதா? எங்கேனும் உராய்வுகள் ஏற்பட்டுள்ளனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரவிருக்கின்ற அடுத்த சில வாரங்களில் அதாவது ஜூலை மாதம் இறுதிக்குள் சுமார் 60 பஸ்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு வந்துவிடும் என்று தெரிகிறது. எஞ்சிய பஸ்கள் அனைத்தும் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முழுமையாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இந்த பஸ் சேவைக்கான அறிமுக விழா முதல்-அமைச்சரின் ஒப்புதலுடன் போக்குவரத்து அமைச்சரால் விரைவில் நடைபெற இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story