'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்தை நாட்டின் வெற்றியை குறிக்க எழுப்பியுள்ளனர்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


ஜெய் ஸ்ரீராம்  என்ற கோஷத்தை நாட்டின் வெற்றியை குறிக்க எழுப்பியுள்ளனர்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x

‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை நாட்டின் வெற்றியை குறிக்கும் விதமாக எழுப்பியுள்ளனர் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி

'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்தை நாட்டின் வெற்றியை குறிக்கும் விதமாக எழுப்பியுள்ளனர் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இந்தியா அபார வெற்றிபெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் அவுட் ஆகி செல்லும்போது இந்திய ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷங்களை எழுப்பினார்கள். இது பாகிஸ்தான் வீரர்களின் மனதை புண்படுத்தியதாகவும், இதுதொடர்பாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த விஷயம் தொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

வெற்றியை குறிக்க...

நமது நாட்டில் இருந்து விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டபோது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளும் வந்தே மாதரம் என்று கோஷம் எழுப்பியதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளார். யாருடைய தூண்டுதலும் இல்லாமல் வெற்றியின்போது உள்ளுணர்வோடு அவர்கள் அதை எழுப்பியுள்ளனர்.

அதேபோல்தான் கிரிக்கெட் போட்டியின்போது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பட்டுள்ளது. நாட்டின் வெற்றியை குறிக்க அவ்வாறு கோஷம் எழுப்பியுள்ளனர். இது மதத்தை குறிப்பதாக நான் நினைக்கவில்லை. வெற்றி உணர்வு இருந்ததாக பார்க்கிறேன். நாம் அந்த நாமம் வாழ்க, இந்த நாமம் வாழ்க என்று எல்லா இடத்திலும் சொல்கிறோம்.

மன உணர்வு சார்ந்தது

மற்ற மதத்தை சார்ந்தவர்கள் இருந்தால் வெற்றியை குறிப்பதற்கு அவர்கள் அந்த வார்த்தையை பயன்படுத்தினால் நான் தப்பு என்று சொல்லமாட்டேன். இதை மதம் சார்ந்ததாக பார்க்கவில்லை. வெற்றியின் உணர்வு சார்ந்ததாகவும், மன உணர்வு சார்ந்ததாகவும் பார்க்கிறேன்.

இவ்வாறு கவர்னர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

புதிய கல்விக்கொள்கை

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராடும் அளவுக்கு எதுவுமில்லை. நான் 14 பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக உள்ளேன். இந்த கல்விக்கொள்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். புரிதல் இல்லாமல் புதுவை மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அழைத்து நான் புரிய வைப்பேன். புதிய கல்விக்கொள்கையால் தாய்மொழிக்கு பங்கம் வராது. தாய்மொழியை ஊக்கப்படுத்துவதுதான் புதிய கல்விக்கொள்கை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story