'இங்கிலாந்தைப் போல் வரி செலுத்தி சோமாலியாவைப் போன்ற சேவைகளை பெறுகிறோம்' - ஆம் ஆத்மி எம்.பி.


இங்கிலாந்தைப் போல் வரி செலுத்தி சோமாலியாவைப் போன்ற சேவைகளை பெறுகிறோம் - ஆம் ஆத்மி எம்.பி.
x
தினத்தந்தி 25 July 2024 5:28 PM GMT (Updated: 25 July 2024 5:29 PM GMT)

இங்கிலாந்தைப் போல் வரி செலுத்தி சோமாலியாவைப் போன்ற சேவைகளை பெறுகிறோம் என ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 23-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ரெயில்வே, உட்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்பட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா பேசியதாவது;-

"கடந்த 2019-ம் ஆண்டு மக்களவையில் பா.ஜ.க.விடம் 303 இடங்கள் இருந்தன. ஆனால் 2024-ல் மக்கள் அவர்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்து 240 இடங்களை மட்டுமே வழங்கியிருக்கிறார்கள்.

அவர்களது இந்த நிலைக்கு சாதி, மத அரசியலின் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் பா.ஜ.க.வின் இந்த நிலைக்கு 'பொருளாதாரம்' என்பதே மிகவும் முக்கியமான காரணமாகும்.

ஒரு சாதாரண குடிமகன் 10 ரூபாய் சம்பாதித்தால், 3 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும், ரூ.2 முதல் ரூ.2.50 வரை ஜி.எஸ்.டி.யில் சென்றுவிடும், ரூ.2 முதலீட்டு செலவுகளில் சென்றுவிடும் மற்றும் ரூ.1 முதல் ரூ.1.50 வரை மற்ற செலவுகளுக்கு சென்றுவிடும். இதன் மூலம் 7 முதல் 8 ரூபாய் வரை அரசாங்கத்தின் கருவூலத்திற்கு சென்றுவிடுகிறது.

அப்படியானால் சாதாரண குடிமகனுக்கு என்ன லாபம் இருக்கிறது? இந்த வரிகளால் என்ன கிடைக்கிறது? இந்திய மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி, மருத்துவம், போக்குவரத்து அல்லது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கிடைக்கிறதா? இந்தியாவில் நாம் இங்கிலாந்தைப் போல் வரி செலுத்தி சோமாலியாவைப் போன்ற சேவைகளை பெறுகிறோம்."

இவ்வாறு ராகவ் சத்தா எம்.பி. தெரிவித்தார்.


Next Story