அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை; முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி


அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை; முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி
x
தினத்தந்தி 28 Jun 2024 4:28 PM GMT (Updated: 28 Jun 2024 6:19 PM GMT)

சூரஜ் ரேவண்ணா விவகாரத்தில், அவருக்கு எதிராக சதி நடந்துள்ளது என்று எச்.டி ரேவண்ணா கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவிடம், டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவியை சித்தராமையா விட்டு கொடுக்க வேண்டும் என்று மடாதிபதி கூறி இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி.அவர்களுக்கு யாரை முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளதோ, அவர்களை நியமிப்பார்கள். டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவது குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை. முதல்-மந்திரியாக யாரை நியமித்தாலும், அதற்கும் எனக்கும் என்ன தொடர்பு உள்ளது. அது எனக்கு தொடர்பில்லாத விஷயம். கே.என்.ராஜண்ணா உள்ளிட்ட தலைவர்கள் எது வேண்டுமானாலும் பேசட்டும், அதுபற்றி நான் கருத்துசொல்ல மாட்டேன். சூரஜ் ரேவண்ணா விவகாரத்தில், அவருக்கு எதிராக சதி நடந்துள்ளது. எனது குடும்பத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. கோர்ட்டு மீது கவுரவம் இருக்கிறது. மகன்கள் தவறு செய்திருந்தால், அவர்களுக்கு தண்டனை கிடைக்கட்டும். இந்த விவகாரங்களால் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை. தேவேகவுடா ஒக்கலிக சமுதாயத்தின் மிகப்பெரிய தலைவர். அவரை கெம்பேகவுடா ஜெயந்தி விழாவுக்கு அழைக்கவில்லை. அதுபற்றி மடாதிபதியும் எதுவும் பேசாமல், காங்கிரஸ் பற்றியே பேசி இருக்கிறார்.இதற்கெல்லாம் காலத்தின் மூலமாகவே தக்க பதில் கிடைக்கும்.

இவ்வாறு எச்.டி.ரேவண்ணா கூறினார்.


Next Story