உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டல்: தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை - கள்ளக்காதலி வெறிச்செயல்


உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டல்:  தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை - கள்ளக்காதலி வெறிச்செயல்
x
தினத்தந்தி 12 Jun 2024 5:11 PM GMT (Updated: 13 Jun 2024 7:45 AM GMT)

பிரேமாவுடன் உல்லாசமாக இருக்கும்போது அதனை ராஜேஷ் செல்போனில் வீடியோ எடுத்து வைத்ததாக தெரிகிறது.

மைசூரு,

ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதால் தலையில் கல்லைப்போட்டு வாலிபரை படுகொலை செய்த கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மைசூரு டவுன் கேத்தமாரனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரேமா. இவருக்கும் நஞ்சன்கூடு தாலுகா ஸ்ரீராம்புராவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரேமா கணவரின் நண்பர் ராஜேஷ் (வயது 33). இவர் எச்.டி.கோட்டை தாலுகா அம்பாபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் ராஜேஷ், நஞ்சன்கூட்டில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது அவருக்கும், நண்பரின் மனைவியான பிரேமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதற்கிடையே பிரேமாவின் கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால், அவர்களின் நெருக்கம் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில் பிரேமாவுடன் உல்லாசமாக இருக்கும்போது அதனை ராஜேஷ் செல்போனில் வீடியோ எடுத்து வைத்ததாக தெரிகிறது.

இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரேமா, ராஜேசிடம் இருந்து விலக தொடங்கினார்.

இந்த நிலையில் உல்லாசமாக இருக்கும்போது எடுத்த ஆபாச வீடியோவை வெளியிடுவதாக ராஜேஷ், பிரேமாவை மிரட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரேமா, ராஜேசை கொலை செய்ய முடிவு செய்தார். இதுபற்றி தனது சகோதரர் சிவுவிடம் பிரேமா தெரிவித்தார். இதற்கு அவரும் ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரேமா, ராஜேசை தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது பிரேமாவின் வீட்டுக்கு ராஜேஷ் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறுஏற்பட்டுள்ளது. அப்போது சிவு மற்றும் பிரேமா ஆகியோர் சேர்ந்து ராஜேசை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளனர். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நஞ்சன்கூடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். இதுகுறித்து நஞ்சன்கூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேமா மற்றும் அவரது சகோதரர் சிவு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story