பழங்குடியின பெண்கள் தாலி அணியக்கூடாது என்று கூறிய ஆசிரியை சஸ்பெண்ட்


பழங்குடியின பெண்கள் தாலி அணியக்கூடாது என்று கூறிய ஆசிரியை சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 26 July 2024 10:26 AM GMT (Updated: 26 July 2024 11:22 AM GMT)

ராஜஸ்தானில் பழங்குடியின பெண்கள் தாலி அணியக்கூடாது என்று கூறிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் சாடா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா என்ற அமைப்பின் நிறுவனரான இவர், கடந்த 19-ந்தேதி பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

இந்த பேரணியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் பங்கேற்றனர். இதில் பேசிய மேனகா தாமோர், "பண்டிதர்கள் கூறுவதை பழங்குடியின பெண்கள் பின்பற்றக் கூடாது. பழங்குடியின பெண்கள் பொட்டு வைக்கவோ, தாலி அணியவோ கூடாது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். விரதங்களை கடைப்பிடிப்பதை நிறுத்துங்கள். நாம் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.

அவரது பேச்சுக்கு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், ராஜஸ்தான் அரசின் நடத்தை விதிகளை மீறியதாகவும், கல்வித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி ஆசிரியை மேனகா தாமோரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story