இந்திய விண்வெளித்துறையின் மூத்த விஞ்ஞானி காலமானார்

விக்ரம் சாராபாய் உடன் ஏக்நாத் வசந்த் பணியாற்றியுள்ளார்.
புனே,
இந்திய விண்வெளித்துறையின் மூத்த விஞ்ஞானி ஏக்நாத் வசந்த் சித்நிஸ் (வயது 100). இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் ஸ்பேஸ் அப்லிகேஷன் சென்டர் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். மேலும், இந்திய விண்வெளித்துறையின் தந்தையாக கருதப்படும் விக்ரம் சாராபாய் உடன் ஏக்நாத் வசந்த் பணியாற்றியுள்ளார். மேலும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் உடன் பணியாற்றிய பெருமையும் இவர் பெற்றுள்ளார்.
அதேபோல், இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளம் கேரளாவின் தும்பாவில் அமைக்கவும் ஏக்நாத் வசந்த் முக்கிய பங்காற்றினார். விண்வெளித்துறையில் முக்கிய பங்காற்றியதற்காக ஏக்நாத் வசந்திற்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில், வயது முதிர்வு, உடல்நலக்குறைவால் மராட்டியத்தின் புனேவில் உள்ள வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த ஏக்நாத் வசந்த் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏக்நாத் வசந்தின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






