'டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும்' - சந்திரபாபு நாயுடு

டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க. அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக தி.மு.க. அரசு குற்றம் சாட்டி வருகிறது. அதே சமயம், மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயம் கிடையாது என பா.ஜ.க. கூறி வருகிறது.
இந்த சூழலில், டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து ஆந்திர சட்டசபையில் அவர் பேசியதாவது;-
"நாம் நமது தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே சமயம், டெல்லியில் தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக இருப்பதால் இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி.
வாழ்வாதாரத்திற்காக நாம் எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்வோம். ஆனால் தாய்மொழியை நாம் மறக்க மாட்டோம். மொழி தொடர்புக்கு மட்டுமே. அதிக மொழிகளை கற்றுக்கொள்வது சிறந்தது.
சிலர் ஆங்கில மொழியை அறிவு நினைக்கிறார்கள். மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே. அது அறிவைக் கொண்டுவராது. தாய்மொழியை கற்றுக்கொள்வது எளிதானது. தாய்மொழியில் படிக்கும்போது கல்வி அறிவு மேம்படும்."
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.