மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்


மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்
x

Image Courtesy: Manipur Police X image

தினத்தந்தி 7 Oct 2024 7:07 AM GMT (Updated: 7 Oct 2024 8:20 AM GMT)

மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இம்பால்,

மணிப்பூரின் கச்சிங் மற்றும் தவுபல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "நேற்று முன்தினம் (அக்.5) மணிப்பூரின் கச்சிங் மாவட்டத்தின் வபாகாய் நேட்காங் டுரென்மெய் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று நாட்டு துப்பாக்கி, ஒரு ஏர் கன் ரைபிள், 9 மி.மீ. பிஸ்டல், இரண்டு துப்பாக்கிகள், டெட்டனேட்டர்கள் இல்லாத 14 கையெறி குண்டுகள், 51 மிமீ மோட்டார் ஒன்று, 3ம் ரக எம்.கே கையெறி குண்டுகள் இரண்டு, 4.755 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.

அதேபோல, மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் உள்ள சிங்காம் சிங் பகுதியில் நேற்று பாதுகாப்புப்படையினர் நடத்திய மற்றொரு நடவடிக்கையின் போது, எஸ்.எம்.ஜி. ரக நாட்டு துப்பாக்கி ஒன்று, 32 பிஸ்டல் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும் ஒரு 81 மிமீ மோட்டார் ஷெல், நான்கு கையெறி குண்டுகள், மூன்று டெட்டனேட்டர்கள், வெடிமருந்துகள், ஐந்து எறிகுண்டுகள், ஏழு கண்ணீர் புகை குண்டுகள், 11 கண்ணீர் புகை குண்டுகள், இரண்டு சாதாரண குண்டுகள் கைப்பற்றப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story