பஞ்சாப்பில் போலீஸ் நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்


பஞ்சாப்பில் போலீஸ் நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 July 2024 5:53 AM GMT (Updated: 29 July 2024 7:21 AM GMT)

பஞ்சாப்பில் போலீஸ் நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கினர்.

லூதியானா,

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஷிங்கர் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. அதன் அருகிலேயே போலீஸ் சோதனை சாவடியும் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அங்கு பணியில் இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த உள்ளூர் வியாபாரி ஒருவரை தடுத்து நிறுத்தினர்.

இரு சக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்ததாக கூறி அந்த வியாபாரியை போலீசார் கண்டித்தனர். அப்போது வியாபாரிக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் அந்த வியாபாரியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சில மணி நேரத்துக்கு பிறகு அந்த வியாபாரி 100-க்கும் மேற்பட்ட மக்களுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அந்த கும்பல் போலீஸ் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது.

மேலும் அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரையும், மற்றொரு போலீஸ்காரரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். போலீஸ் நிலையத்தை சூறையாடிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story