அசாம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றம் சாட்டப்பட்ட நபர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு


அசாம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றம் சாட்டப்பட்ட நபர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Aug 2024 6:58 AM GMT (Updated: 24 Aug 2024 9:59 AM GMT)

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் மாலை சாலையோரம் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அருகில் அவரது சைக்கிளும் இருந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 10-ம் வகுப்பு படித்து வருவதாகவும், பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 3 பேர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உள்ளூர் மக்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, போலீசார் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட தபுஜல் இஸ்லாம் என்ற நபரை நேற்று கைது செய்தனர். மேலும் 2 குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் போலீசார் கைது செய்த நபரை குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவரிடம் குற்றச் சம்பவத்தை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர். முன்னெச்சரிக்கையாக அந்த நபருக்கு கைவிலங்கும் இட்டிருந்தனர். அப்போது அந்த நபர் யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென அருகில் இருந்த குளத்தில் பாய்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்குப் பின்னர் அந்த நபரின் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எஞ்சியுள்ள 2 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story