ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும்: உமர் அப்துல்லா கேபினட்டில் தீர்மானம் நிறைவேற்றம்


ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும்: உமர் அப்துல்லா கேபினட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
x

ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மாநில முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்றார். தேசிய மாநாட்டு கட்சி அரசு அமைந்த பிறகு அங்கு முதல் முறையாக நேற்று கேபினட் கூட்டம் நடைபெற்றது. உமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தின் போது, மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் மந்திரி சபை வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களின்படி, "ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்தும் தீர்மானத்தின் வரைவு தயாரிக்கப்பட்டு, அந்த தீர்மானத்தின் வரைவை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காக, முதல் மந்திரி உமர் அப்துல்லா ஓரிரு நாட்களில் டெல்லிக்கு செல்வார்" என்று தெரிவித்தன. உமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணை முதல் மந்திரி சுரிந்தர் சவுத்ரி மற்றும் மந்திரிகள் சகீனா மசூத் இடூ, ஜாவேத் அகமது ராணா, ஜாவைத் அகமது தார் மற்றும் சதீஷ் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story