பணம் பறிமுதல் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

ரூ.15 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிக்கிய டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி வர்மாவை, அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந்த் வர்மா. ஹோலி பண்டிகையின்போது இவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு படையினர், தீயை அணைக்க சென்றபோது, அந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் இருந்தன. அவற்றை பின்னர் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.
கணக்கில் காட்டப்படாத அந்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், சம்பந்தப்பட்ட நீதிபதியை அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக மாற்றம் செய்ய முடிவு செய்தது. கொலீஜியம் தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
எனினும், முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் ஏற்க மறுத்தனர். அலகாபாத் ஐகோர்ட்டு ஒரு குப்பைத் தொட்டியா? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யும்படி, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது. இதன்படி, நீதிபதி வர்மா இதற்கு முன்பு பணியாற்றிய அலகாபாத் ஐகோர்ட்டுக்கே அவரை பணியிட மாற்றம் செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு கடந்த 20-ந்தேதி எடுக்கப்பட்டது என அதுபற்றிய தீர்மானம் ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும், வர்மாவின் பணியிட மாற்றத்திற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதனையும் அந்த தீர்மானம் தெரிவிக்கவில்லை. ஆனால், வர்மாவின் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்திற்கும், இந்த பணியிடமாற்ற முன்மொழிவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் அளித்து உள்ளது.
இந்த விவகாரம் வெளிவந்ததும், நீதிபதியின் பொறுப்பில் இருந்து வர்மா உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதுபற்றி டெல்லி ஐகோர்ட்டு சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில், 24-ந்தேதி (இன்று) அடுத்த உத்தரவு வரும் வரை வர்மாவை பணியில் இருந்து நீக்கி உத்தரவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி வர்மாவின் அமர்வு ஆனது, விற்பனை வரி, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது.