எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; இந்திய ராணுவ வீரர் வீர மரணம்

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு எல்லைப்பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தினேஷ் குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு எல்லைப்பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.






