ஆசியன் உச்சி மாநாடு: காணொலி வாயிலாக பங்கேற்க பிரதமர் மோடி முடிவு

மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
புதுடெல்லி,
ஆசியான் உச்சி மாநாடு மலேசியாவில் வரும் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தீபாவளி பண்டிகை காரணமாக பிரதமர் மோடியால் ஆசியான் மாநாட்டில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும், காணொலி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார் என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தக விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. டொனால்டு டிரம்பும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார். இத்தகைய சூழலில், டிரம்பை நேரில் சந்திப்பதை தவிர்க்கும் விதமாக ஆசியான் மாநாட்டில் நேரில் கலந்து கொள்வதை மோடி தவிர்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, 2022 தவிர அனைத்து ஆசியான் உச்சி மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த முறை ஆசியான் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, எகிப்தில் நடைபெற்ற இஸ்ரேல்–ஹமாஸ் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்விலும் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அமைதி மாநாடும் டிரம்ப் தலைமையில் நடைபெற்றதால், மோடி நேரில் செல்வதை தவிர்த்திருந்தார். இந்தியா சார்பில் வெளியுறவு இணை மந்திரி கலந்து கொண்டார்.






