1-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை


1-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 28 May 2024 12:04 AM GMT (Updated: 28 May 2024 12:43 AM GMT)

மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்பது குறித்து 'இந்தியா' கூட்டணி டெல்லியில் வருகிற 1-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

தொடர்ந்து 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. 400-க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து அந்த கட்சி பிரசாரம் செய்துள்ளது. ஆனால் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள். தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன.

இந்த 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் வருகிற 1-ந் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் தேர்வு..?

கூட்டத்தில் 7 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் எப்படி செயலாற்றி உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும் விவாதிக்க இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளை பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் கூட்டத்தில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக பிரதமர் தேர்வு பற்றியும் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 1-ந் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது


Next Story