ராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் தாக்கு


ராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் தாக்கு
x
தினத்தந்தி 6 Jun 2024 10:09 AM GMT (Updated: 6 Jun 2024 12:10 PM GMT)

உத்தரபிரதேசத்தில் பாஜக இன்னும் அதிக தொகுதிகளை இழந்திருக்கும். சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்த அயோத்தி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

லக்னோ,

2024 -மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான பிரசாரமாக அயோத்தி ராமர் கோவில் இருந்தது. இதனால், ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில் பாஜகவிற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது.

ராமர் கோவில் உள்ள தொகுதியில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட லல்லு சிங் 4,99,722 - வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

அயோத்தி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது குறித்து அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் பாஜக இன்னும் அதிக தொகுதிகளை இழந்திருக்கும். சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்த அயோத்தி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ஏழைகளின் நிலத்தை பொய் வழக்குகள் போட்டு வலுக்கட்டாயமாக பாஜகவினர் பறித்தனர்.

அவர்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டது. சந்தை விலைக்கு இணையாக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. புனிதமான காரியத்திற்காக ஏழைகளை அழித்தார்கள். இதனால் தான் அயோத்தி மற்றும் பல தொகுதிகளில் உள்ள மக்கள் பாஜகவிற்கு எதிராக ஓட்டளித்தனர் என நினைக்கிறேன்" என்றார்.


Next Story