திருமணத்திற்கு பிறகும் முன்னாள் காதலனின் நினைவாகவே இருந்த மனைவி: ஆசையை நிறைவேற்றி வைத்த கணவர்


திருமணத்திற்கு பிறகும் முன்னாள் காதலனின் நினைவாகவே இருந்த மனைவி:  ஆசையை நிறைவேற்றி வைத்த கணவர்
x
தினத்தந்தி 4 Aug 2024 11:42 AM GMT (Updated: 4 Aug 2024 12:25 PM GMT)

இரவு நேரத்தில் ஆண் ஒருவர் மனைவியை ரகசியமாக பார்த்துவிட்டு செல்வது கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பாட்னா,

பீகார் மாநிலம் லகிசாராய் மாவட்டத்தில் உள்ள ராம்கார்க் சவுக் பிளாக்கை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவருக்கும் குஷ்பு குமாரி என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில்தான் குஷ்பு குமாரியின் நடத்தையில் ராஜேஷ் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்காமல் மழுப்பி கொண்டே இருந்தார். இந்நிலையில்தான் இரவு நேரத்தில் ராஜேஷ் குமாரின் வீட்டுக்கு யாரோ ஆண் ஒருவர் வந்து செல்வது தெரியவந்தது.

இதுபற்றி ராஜேஷ் குமாரின் தாய் அறிந்தார். இந்நிலையில்தான் சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் குஷ்பு குமாரி ஆண் ஒருவருடன் பேசி கொண்டிருந்தார். இதனை அவரது மாமியார் பார்த்துவிட்டார். இதையடுத்து அந்த நபர் வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். இதையடுத்துதான் பிரச்சனை வெடித்தது. இந்த தகவல் ராஜேஷ் குமாரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் மனைவி குஷ்பு குமாரியிடம் விசாரித்தார். அப்போதுதான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது வீட்டுக்கு வந்து சென்ற நபரின் பெயர் சந்தன் குமார். அவர் யார் என்றால் குஷ்பு குமாரியின் சிறுவயது நண்பராம். குஷ்பு குமாரியும் அவரது காதலரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்தனர். ஆனால் அதற்குள் குஷ்பு குமாரியை கட்டாயப்படுத்தி அவரது குடும்பத்தினர் ராஜேஷ் குமாருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணத்துக்கு பிறகு மீண்டும் குஷ்பு குமாரிக்கு காதலன் சந்தன் குமாரின் நியாபகம் அடிக்கடி வந்து போனது. காதலனை பார்க்க முடியாமலும் பேசமுடியாமலும் தவியாய் தவித்து வந்தார். ஒருக்கட்டத்தில் திருமணம் ஆனதை மறந்தும் குஷ்பு குமாரி காதலனிடன் போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார். அதன்பிறகு இரவு நேரத்தில் அவ்வப்போது சந்தன் குமாரை வீட்டுக்கு வரவைத்து குஷ்பு குமாரி உல்லாசமாக இருப்பாராம். இந்த தொடர்பு ரொம்ப நாளாகவே நீடித்து வந்துள்ளது.

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததையடுத்து ராஜேஷ் குமார் கோபமடையவில்லை. மாறாக அவர் தனது மனைவி குஷ்பு குமாரியை அவரது ஆசைப்படியே காதலன் சந்தன் குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதையடுத்து சந்தன் குமார் - குஷ்பு குமாரியை அவர் ஊரில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தியதோடு, இவர்கள் 2 பேரும் காதல் செய்கிறார்கள். அவர்களின் விருப்பத்துக்கு குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளேன் என அறிவித்தார். அதுமட்டுமின்றி இருவரையும் அருகே உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று திருமணமும் செய்து வைத்தார். மனைவியின் ஆசையை நிறைவேற்ற அந்த பெண்ணின் கணவர் செய்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story