ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை; 21 ரெயில்கள் ரத்து, 10 ரெயில்கள் திருப்பி விடப்பட்டன


ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை; 21 ரெயில்கள் ரத்து, 10 ரெயில்கள் திருப்பி விடப்பட்டன
x
தினத்தந்தி 2 Sep 2024 1:15 AM GMT (Updated: 2 Sep 2024 1:58 AM GMT)

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழையை முன்னிட்டு திருப்பதி, மன்னார்குடி, பெங்களூரு பகுதிகளில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 10 ரெயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ரெயில், வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.

கனமழையால், தெலுங்கானாவின் கேசமுத்ரம் மற்றும் மகபூபாபாத் இடையேயான ரெயில்வே தண்டவாளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னை சென்டிரலில் இருந்து சாப்ரா மற்றும் புதுடெல்லிக்கு சென்று, வர கூடிய ரெயில்கள் உள்பட 21 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தெற்கு மத்திய ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது.

திருப்பதி, மன்னார்குடி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறப்பட கூடிய ரெயில்கள் உள்பட 10 ரெயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன என்றும் அந்த அறிவிப்பு தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, ரெயில்வே உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதன்படி, ஐதராபாத் 27781500, வாரங்கால் 2782751, காசிபேட் 27782660 மற்றும் கம்மன் 2782885 ஆகிய எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.


Next Story