ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தல்; இரவிலும் தீவிர வாகன சோதனை


ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தல்; இரவிலும் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 16 Sep 2024 6:02 PM GMT (Updated: 16 Sep 2024 6:06 PM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாளை மறுநாள் 24 சட்டசபை தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

குல்காம்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இதன்படி, முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெறுகிறது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெற உள்ளது.

நாளை மறுநாள் 24 சட்டசபை தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள சூழலில், குல்காம் மாவட்ட நிர்வாகம் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டின் மேற்பார்வையின் கீழ் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. போலீசாரின் பாதுகாப்புடன் இந்த சோதனையானது இரவிலும் நடந்து வருகிறது. இதேபோன்று பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இரவிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.


Next Story