டெல்லி கூட்ட நெரிசல் எதிரொலி: பீகாரில் டிக்கெட் இல்லாத பயணிகளுக்கு ரெயில் நிலையங்களில் நுழைய தடை

கோப்புப்படம்
பீகாரில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் உள்ள பயணிகள், ரெயில் நிலையங்களில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
மகா கும்பமேளா விழா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வருகிறது. கும்பமேளா தொடங்கியதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் புனித நீராடி வருகின்றன. மேலும் பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் ஏறுவதற்காக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
சனிக்கிழமை இரவு டெல்லியில் பிரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரெயிலுக்காக பக்தர்கள் காத்திருந்த நேரத்தில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிழக்க மத்திய ரெயில்வே பீகார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாத பயணிகள் ரெயில் நிலையத்திற்கு நுழைய தடைவிதித்துள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி சரஸ்வதி சந்த்ரா இது தொடர்பாக கூறுகையில் "கிழக்கு மத்திய ரெயில்வேயின் அதிகார வரம்பிற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா கும்பமேளாவிற்கு மக்கள் சுமூகமாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய ரெயில்வே உறுதிப்பூண்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் நுலைவு வாயில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் நுழைய தடைவிதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என்றார்.