கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு - பினராயி விஜயன் வேதனை


கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு - பினராயி விஜயன் வேதனை
x
தினத்தந்தி 30 July 2024 12:08 PM GMT (Updated: 31 July 2024 8:00 AM GMT)

விமானப்படையின் 2 விமானங்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது இதனால், தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டனர்.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 107 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் ஏற்பட்ட பேரழிவு என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் ஏற்பட்ட பேரழிவு. விமானப்படையின் 2 விமானங்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு, கோழிக்கோடு பகுதிகளில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர். கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவ குழுக்கள் சென்றுள்ளன.

48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பெய்துள்ளது. மண்ணில் புதைந்தும், எரிந்தும் 6 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன. 350 வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துக்காக பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்த நபர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம். அரசின் மீட்பு நடவடிக்கைகள் முழுமை அடைய பாதிக்கப்பட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.


Next Story