ஓட்டுத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கு நேர்மையான வாக்காளர் பட்டியல் அவசியமானது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டார். அதற்கான ஆதாரங்களையும் அவர் குறிப்பிட்டார். பா.ஜனதாவும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த இந்திய தேர்தல் ஆணையமோ ராகுல் காந்தியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஓட்டுத் திருட்டுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்க நாட்டு மக்களுக்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, “வாக்குகள் திருடப்படுவது ஒரு நபர் - ஒரு ஓட்டு’ என்கிற அடிப்படை கருத்தியலுக்கே எதிரானது. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கு நேர்மையான வாக்காள பட்டியல் அவசியமானது. அதனால்தான் , மக்கள் மற்றும் கட்சிகள் சரிபார்க்கும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறோம்.
எங்களது குரலுக்கு வலு சேர்க்க Votechori.in/ecdemand என்கிற இணையதளத்தை பார்வையிடுங்கள் அல்லது 96500 03420 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். இது நம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மோதல் ” என குறிப்பிட்டுள்ளார்.






