சிலி நாட்டின் ஜனாதிபதி ஏப்ரல் 1-ந்தேதி இந்தியா வருகை

சிலி நாட்டின் ஜனாதிபதி போரிக், 5 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்வார்.
புதுடெல்லி,
சிலி நாட்டின் ஜனாதிபதி கேப்ரியெல் போரிக் பான்ட், ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 5 நாட்களுக்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஆதரவளிப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜனாதிபதியான பின்பு போரிக் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் போரிக் இந்தியாவுக்கு வருகை தருகிறார் என்று மத்திய வெளிவிவகார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.
அவருடன் மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், வர்த்தக அமைப்புகள், ஊடகம் மற்றும் இந்தியா-சிலி நாடுகளுக்கான கலாசார பிணைப்புடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றும் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளது.
அவருடைய இந்த பயணம் ஆனது, இருதரப்பு உறவுகளில் தலைவர்கள் ஒரு விரிவான மறுஆய்வு மேற்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். அதனுடன், மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பர நலன் பற்றி ஆலோசனை மேற்கொள்ளவும் ஏதுவாகும் என மத்திய அமைச்சகம் தெரிவிக்கின்றது.
அவர், புதுடெல்லி தவிர, ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்வார். இதன்பின்னர், ஏப்ரல் 5-ந்தேதி சிலிக்கு திரும்புவார்.