ஓய்வூதியம் பெறுவோருக்கு குட் நியூஸ்.. இனி எந்த வங்கியில் இருந்தும் பென்சன் வாங்கலாம்!


ஓய்வூதியம் பெறுவோருக்கு குட் நியூஸ்.. இனி எந்த வங்கியில் இருந்தும் பென்சன் வாங்கலாம்!
x
தினத்தந்தி 4 Sep 2024 12:48 PM GMT (Updated: 4 Sep 2024 12:58 PM GMT)

பணி ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த புதிய பட்டுவாடா முறை பெரும் நிவாரணமாக இருக்கும்.

புதுடெல்லி:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பின்மூலம் செயல்படுத்தப்படும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், இனி நாடு முழுவதும் உள்ள எந்த வங்கியில் இருந்தும், அல்லது வங்கி கிளையிலிருந்தும் ஓய்வூதியம் பெற முடியும்.

'மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பட்டுவாடா முறை'க்கு (சிபிபிஎஸ்), மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மந்திரியும், இபிஎப்ஓ மத்திய அறங்காவலர் வாரியத் தலைவருமான மன்சுக் மாண்டவியா ஒப்புதல் அளித்துள்ளார்.

மிகப்பெரிய இந்த மாற்றம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு வங்கி மூலமாகவும், அல்லது எந்த கிளை மூலமாகவும் ஓய்வூதியப் பட்டுவாடாவை செயல்படுத்துகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேசுகையில், "மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பட்டுவாடா முறைக்கு ஒப்புதல் அளித்திருப்பது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நவீனமயமாக்கலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். ஓய்வூதியம் பெறுவோர், நாட்டின் எந்த இடத்திலும் உள்ள எந்தவொரு வங்கியிலிருந்தும், எந்தவொரு கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது, ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால சிக்கல்களுக்கு தீர்வு காண்பதுடன், தடையற்ற மற்றும் திறமையான பட்டுவாடா வழிமுறையை உறுதி செய்கிறது" என்றார்.

இந்த புதிய நடைமுறையின்மூலம் 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், ஓய்வூதியம் பெறுவதும் எளிமையாக இருக்கும்.

ஓய்வூதியம் பெறுபவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றாலோ, அவரது வங்கி அல்லது கிளையை மாற்றினாலும்கூட, ஓய்வூதிய பட்டுவாடா ஆணைகளை ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. இந்தியா முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுவதை மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா அமைப்பு உறுதி செய்யும்.

பணி ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும். இந்த புதிய வசதி, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய பட்டுவாடா முறையானது அடுத்த கட்டமாக, ஆதார் அடிப்படையிலான பட்டுவாடா தொடர்பான மாற்றத்தை சுமுகமாக செயல்படுத்தும் என்று தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இனி ஓய்வூதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறத் தொடங்கும் நேரத்தில் சரிபார்ப்புக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. பணம் விடுவிக்கப்பட்டவுடன் உடனடியாக கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், புதிய முறைக்கு மாறிய பிறகு, ஓய்வூதியம் பட்டுவாடா செய்வதற்கு ஆகும் செலவும் குறையும் என்றும் தொழிலாளர் நலத்துறை குறிப்பிட்டுள்ளது.


Next Story