90 சதவீத மக்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்-ராகுல்காந்தி


90 சதவீத மக்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்-ராகுல்காந்தி
x
தினத்தந்தி 25 Aug 2024 4:12 AM GMT (Updated: 25 Aug 2024 4:34 AM GMT)

நாட்டின் 90 சதவீத மக்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிரயாக்ராஜ்,

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நேற்று நடந்த அரசியலமைப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர், அதில் பேசும்போது மீண்டும் இதை வலியுறுத்தினார்.

நாட்டின் 90 சதவீத மக்கள் அமைப்புக்கு வெளியே இருக்கிறார்கள். திறன், அறிவு பெற்ற அவர்களுக்கும், அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால்தான் ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை நாங்கள் எழுப்புகிறோம்.நாட்டின் அரசியல் சாசனம் வெறும் 10 சதவீதத்தினருக்கானது அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவின் யதார்த்தத்தில் கொள்கைகளை வகுக்க முடியாது.

அரசியல் சாசனத்தைப்போல சாதிவாரி கணக்கெடுப்பும் காங்கிரசுக்கு ஒரு கொள்கை கட்டமைப்பாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது.இந்த சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மூலம் அரசியல்சாசனத்தை பாதுகாக்க விரும்புகிறோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்


Next Story