நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு கோர்ட்டு உத்தரவு


நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Sep 2024 6:17 AM GMT (Updated: 28 Sep 2024 8:04 AM GMT)

"தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

தேர்தல் பத்திரம் முறைகேடு, மிரட்டி பணம் பறித்ததாக பாஜக தலைவர்களுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் பத்திரம் நடைமுறைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தான் முக்கிய காரணம். தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்தது மத்திய நிதி அமைச்சகம் தான். இதனால் தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் பெங்களூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் அமைப்பை சேர்ந்த ஆதர்ஷ் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை, பாஜக தலைவர் ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, தேர்தல் பத்திரம் புகார் தொடர்பாக நிர்மலா சீதாராமன் உள்பட மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பெங்களூர் திலக் நகர் போலீசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.


Next Story