மேற்கு வங்காளம்: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட பயிற்சி டாக்டர்கள்


மேற்கு வங்காளம்: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட பயிற்சி டாக்டர்கள்
x

மேற்கு வங்காளத்தில் பயிற்சி டாக்டர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

கொல்கத்தா,

கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவ மாணவி பணியில் இருந்தபோது கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதை கண்டித்தும், நீதி கேட்டும் அந்த மருத்துவக் கல்லூரியின் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாநில சுகாதாரத் துறை செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும், போதுமான எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும். தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். பிரச்சினைக்குத் தீர்வு காண மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. மாநிலம் தழுவிய அளவிலான போராட்டங்களும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி டாக்டர்கள் நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது இருதரப்பு இடையே சுமூக தீர்வு எட்டப்பட்டது. இதையடுத்து, கடந்த 15 நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக பயிற்சி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story