ஓடும் ரெயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த ராணுவ வீரர்.. அதிர்ச்சி சம்பவம்


ஓடும் ரெயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த ராணுவ வீரர்.. அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 15 Jun 2024 11:19 PM GMT (Updated: 16 Jun 2024 12:48 AM GMT)

குடிபோதையில் பெண் மீது ராணுவ வீரர் சிறுநீர் கழித்தது தெரிய வந்துள்ளது.

போபால்,

டெல்லியில் இருந்து சத்தீஷ்கார் மாநிலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு பெண், தன்னுடைய 7 வயது குழந்தையுடன் பயணம் செய்தார். அவர் பயணித்தது படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பெட்டி ஆகும். அவருக்கு கீழ் அடுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. தாயும், மகளும் அதில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்கள்.

மேல் படுக்கையில் ராணுவ வீரர் ஒருவர் படுத்து இருந்தார். ரெயில் குவாலியர் ரெயில் நிலையம் அருகே வந்தது. அப்போது மேல் படுக்கையில் இருந்து கீழே தண்ணீர் வழிந்தது. இதனால் விழித்து கொண்ட அந்த பெண், எழுந்து பார்த்தார். ஒருவித நெடியும் வீசியுள்ளது. இதனால் மேல் படுக்கையில் படுத்திருந்த ராணுவ வீரரை பார்த்தபோது அவருடைய உடை நனைந்து இருந்தது. அவர் குடிபோதையில் சிறுநீர் கழித்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவர், தனது கணவருக்கு இதுகுறித்து செல்போனில் தெரிவித்தார். அவர் ரெயில்வே உதவி எண்ணுக்கு இதுதொடர்பாக புகார் அளித்தார். தகவலறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் சிறுநீர் கழித்த ராணுவ வீரர் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பெண் ஆன்லைனின் பிரதமர் அலுவலகத்துக்கும் ரெயில்வே மந்திரிக்கும் புகார் அளித்து இருக்கிறார். இந்த சம்பவம் சிறிதுநேரம் ரெயில் பயணிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.


Next Story